Thursday, May 9, 2013

பூதம் வெளிப்படும் கிணறுகள் !!!-மாயன்

கடந்தவார மலைமுரசின் ஆசிரிய எழுத்துக்கள் இவை !


செங்கலடிக் கொலைகளின் பின்னர் சுவாரசியமாக அக் கொலைகளை இரசிக்கக் கற்றுக்கொள்ளச் சில இணையத் தளங்கள் தமது செய்திகளை புனையத் தொடங்கி விட்டன. 
ஒரு பதினாறு வயதுப் பெண்ணின் மனப் பிறழ்வைப் புரிந்து கொள்ள முடியாத பெற்றோரும் அதனைப் பயன்படுத்த முனைந்த தமிழ்ச் சமூகமும் கூட தம்மளவில் இக் கொலைகளுக்குப் பொறுப்பு கூறத்தான் வேண்டும். 
அற்புதமான கண்ணதாசனின் பாடலொன்று ஞாபகம் வருகின்றது. - எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே.. அவர் நல்லவராவதும் தீயவராவதும்.... சிறிது மாற்றிக் கொள்வோமா.. பெற்றோர் வளர்ப்பினிலே- என்ற வரிகளின் தார்ப்பரியம் புரிந்து கொள்ளப்படாமலே அல்லது பேசப் படாமலே போய்விடுகின்றது இவ்வகைக் கொலைகளில்.... சமூகம் தனது இறுக்கமான கட்டுக் கோப்புக்களின் வரிகளின் ஊடாக அவர்களைக் கொலையாளிகளாகத் தீர்மானிப்பதுடன் அதற்கான முழுப் பொறுப்பையும் அவர்களின் மீதே சுமத்திவிட்டு நழுவிக் கொள்கின்றது.
எமது ஆறாம் அறிவின் மீது இரசனைக் குறிப்புக்களாகப் பெண்ணும், அவளின் அங்க லாவண்யங்களும், அவளுடனான பாலியல் உறவும் படிந்து கிடப்பதால் அதனைத் தாண்டிப் பெண்ணைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக நாம் மாறி விட்டோம் என்பதே உண்மை... அதன் ஒரு விதமான வார்த்தைப் பிரயோகம் தான் காதலிக்கும் பெண்ணை பார்த்து நாம் பயன்படுத்தும் வார்த்தை -- அவளை மடக்கி விட்டோம்-- என்பது. கொலைகளுக்குப் பின் அப் பதின்ம வயதுப் பெண்ணின் மீது வரையப்பட்ட காமம் கலந்த இரசனைக் குறிப்புக்கள் அவள் அனைவருடனும் உடலுறவு கொண்டாள் என்பதும் அவள் போதைப் பழக்கமுடையவள் என்பதுமான நிரூபிக்கப்படாத வரைவுகளே. தனது குழந்தைக்குச் சுதந்திரம் கொடுத்த பெற்றோருக்கு இவ்விடயத்தில் எந்தப் பொறுப்பும் இல்லையா என் நண்பர்களே???? அவர்கள் கொல்லப்பட்டு விட்டதால் அவர்களின் தவறுகள் யாவும் கழுவப்பட்டு விட்டனவா?
கையடக்கத் தொலைபேசியினை வாங்கிக் கொடுத்தது யார்? வீட்டில் தனியே பெண் குழந்தையை விட்டு விட்டு கண்ணும் கருத்துமாய்ப் பணத்தைச் சேர்க்க முனைந்தது யார்? பதின்ம வயதில் பல தடவைகள் காதல் வயப்பட்டதாக கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால் அதன் மூல காரணத்தைக் கண்டறிய முயற்சிக்காமல் இருந்தது யார்? இப்படி அடுக்கப்படும் கேள்விகளுக்கு பதிலை எவ்விதமான பக்கச் சார்புமின்றி உங்கள் ஆழ் மனதில் கேட்டுப் பாருங்கள்....
இயேசுவின் வரிகளை மீட்டுகின்றேன் நான்... எவனொருவன் குற்றம் செய்யவில்லையோ அவன் மட்டும் முன் வந்து அவளின் மீது கற்களை வீசட்டும்.....