எந்த பாடசாலையும் , ஒரு மாணவனிடம் உள்ள திறமையை தட்டிவிட்டு தலைநிமிர்த்துவதும் இல்லை, அப்படி தரைமட்டமாக்குவதும் ஒவ்வொரு ஆசிரியரின் கையில்தான் உள்ளது... என்ற கருத்தை அரசு பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்களின் அணுகுமுறைகளை ‘சாட்டை’யால் அடித்திருப்பதோடு, அதன் அவலநிலையையும் கலந்து ‘எச்சரிக்கை’ மணியை ஓங்கி அடித்து எங்கள் பார்வைக்கு வந்துதான் சாட்டை.
ஐந்து பாடல்கள்,நான்கு சண்டை காட்சிகள்
என மாசலாவை தூறி எமக்கு தரும் தமிழ் திரைத்துறை சில நல்ல படங்களை தராமலும்
இருப்பதில்லை.
அவ்வாறன வரிசையில் இயக்குனர் பிரபு சாலமன் தயாரிப்பில் வந்ததுதான் சாட்டை என்ற கல்வி அரசியலை பேசும்
படம். சில வருடங்களுக்கு முன் வந்த `பசங்க’ என்ற படம்
பேசப்படாத பாடசாலை மாணவர்கள் பிரச்சனையை மெதுவாக பேசியது அப்படத்திற்கு தேசிய
விருது கூட கிடைத்தது.ஆனால் பசங்க படத்தில் பேசாமல் விடப்பட்ட கல்வி அரசியலை
இந்தப் படம் காரசாரமாக பேசியிருக்கிறது.
பாடசாலை கல்வியை வியாபாரமாக்கிவிட்ட
சூழலில் அரசுப் பள்ளிகளில் இன்று நடக்கும் அவலம் அப்படியே இயக்குனர் அகத்தியனின்
பட்டறையிலிருந்து வந்தத இயக்குனர் அன்பழகனால்
தோலுரிக்கப்பட்டுள்ளது
தனது முதல் படத்திலே ஒரு மிக
முக்கியமான அரசியலை பேசும் படத்தைச் சமரசங்களின்றி இயக்கியிருக்கும் அன்பழகனை நாம்
பாராட்டியே ஆக வேண்டும்.
தூக்கி எறியும் சண்டை காட்சிகளோ
நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் சேர்ந்து ஆடும் பாடல் கட்சிகளோ எதுவும் இல்லாத
சந்தர்பத்தில் அதிகமான பாடசாலை காட்சிகளில் தன் உச்ச திறமையை காட்டி
சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜீவன், பள்ளிக்குள்ளே சுற்றிவருகிற ஒளிப்படக்கருவி
எந்த நெருடலும் இல்லாமல் நம்மையும் அங்கு கூட்டிச்சென்று விடுகிறது.
நல்லாசிரியருக்கான அத்தனை தகுதியும்
கொண்ட ஆசிரியராகச் தயாளன் என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நன்றாக வாழ்த்திருக்கிறார்
என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அவர் கடைசியாக நடித்த ஈசன் பட காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் இருந்து
இன்னும் வெளிவரவில்லை போல.. எந்நேரமும் முகத்தை விறைப்பாகவே
வைத்திருகிறார்.விறைப்பை கொஞ்சம் குறைத்திருக்கலாம்..
மிகுந்த பொறுப்புணர்வுடன் அவர் நடந்துகொள்ளும் விதம், அனைவரும்
தன்னைத் தாக்கும்போதும் தன்னுடைய மாணவிக்காக அடிவாங்கிக்கொள்ளும் குணம், எந்த சூழலிலும்
மாணவர்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவது என ஒரு உண்மையான ஆசிரியராக
வாழ்ந்திருக்கிறார்.
தம்பி ராமையா.. படத்தின் இன்னுமொரு
கதாநாயகன் கதையின் வில்லனாக நக்கலுடன் மிரட்டி இருக்கிறார். வில்லத்தனமான
ஆசிரியராக பிரித்து மேய்ந்து விடுகிறார்.
...முடியை ஒதுக்கி விட்டு வழுக்கை
தலையில் வடியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டே ரணகளம் பண்ணியிருக்கிறார். சொல்லப்போனால்
படம் விறுவிறுப்பாகப் போவது தம்பி ராமையாவின் சேட்டைகளால் தான்.
படத்தின் சுவாரஸ்யங்கள்...
முதல் காட்சியில் உந்துருளியில் வரும்
சமுத்திரகனி நம்மவர் கமலை நினைவு படுத்துகிறார் . முக்கியமாக பிள்ளைகளுக்கு வகுப்பு
எடுக்கும் காட்சிகளில் நமக்கு பிடித்த ஒரு ஆசிரியராக நம் கண் முன் நிற்கின்றார்.
வேக வாசிப்பு பயிற்சி , நினைவு அதிகரிக்கும் பயிற்சி, தோப்ப்புக்கரணம் போட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பது போன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு
வழங்கும் காட்சிகள் சுவாரஸ்யம்.
முக்கியமாக பெண்கள் கழிவறையை எப்படி
இருக்கு என்று எட்டி பார்த்து தண்டனை அனுபவிக்கும் மாணவனை பாராட்டி பேசும் காட்சிகள் ஒரு பானை
சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
வெகு நாட்களுக்கு பிறகு ஜுனியர்
பாலைய்யா..... பாடசாலை அதிபராக நடித்து இருக்கின்றார்.. அவர் தம்பிராமய்யாவின்
அதட்டல் உருட்டலுக்கு பயப்படும் இடங்களில்
கலக்கி இருக்கிறார்.
தம்பிராமய்யா வரும் அனைத்து
காட்சிகளும் சுவாரசியம்தான்.
பிளாக் பாண்டி, யுவன், சதிஷ் மகிமா போன்றவர்கள்
மாணவர்களுக்கான பாத்திரத்தை சிறப்பாகவே செய்து இருக்கின்றார்கள்..
இமானின் இசை படத்துக்கு பெரிய பலம்..
பாடசாலை ஆசிரியர்கள் செய்யும் கல்வி
அரசியலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இருந்த ஏக்கங்கள் கோபங்கள்
அனைத்தையும் இந்தப் படத்தில் காண முடிந்தது. ஒவ்வொரு காட்சியும் அதில் வரும்
வசனங்களும் பிரமாதம்.. கேவலமான கல்வி அரசியலை இன்னும் ஆழமாகப் பேசியிருக்கலாம்.ஆனாலும்
வீரியம் குறைந்து விடவில்லை.
.அன்பழகன் கூர்மையான வசனங்கள் படத்திற்கு
இன்னுமொரு பலம் ‘ஏணியை கூரை மேல போடாதீங்க, வானத்தை நோக்கிப் போடுங்க...’ என்ற ஒரு வசனமே
போதும் இயக்குனரின் தரத்தைச் சொல்ல..
இன்றைய காலத்திற்க்குத் தேவையான கதை, சில அரசுபாடசாலைகளின்
நிலைமை, நல்ல ஆசிரியருக்கான அடையாளம் என்ன? என்பதைத்
தெளிவாகப் பதிவு செய்துள்ளதால் நிச்சயம் பாராட்டப் படவேண்டிய, அதே சமயம்
பார்க்கவேண்டிய படம்...!
.இந்த படத்தை மாணவர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ அனைத்து கட்டாயம்
ஆசிரியர்களும், கல்வி வியாபாரிகளும் பார்த்தாக வேண்டும், .