Monday, January 30, 2012

மூதூர் குன்றுகள் புதையல் பூமியா? புதைத்த உடல்கள் எரிக்கப்படுவது ஏன்?

கடந்த 24 ஜனவரி 2012 மூதூர் சென்ற போது ஒருதகவலை கேள்விப்பட்டேன்.மூதூர் கிழக்கு கணேசபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக 8 நபர்கள் கச்சக்கொடி மலை காட்டுப்பகுதியில் திரிந்து இருக்கிறார்கள் ,அந்த பகுதியில் செனைப்பயிர் செய்பவர்களிடம் சிங்களத்தில் உரையாடி இருக்கிறார்கள்,தாங்கள் போலீஸ் எனவும்  ,மலைப்பகுதிக்கு வரவேண்டாம் எனவும் கூறி இருக்கின்றனர், அவர்கள் நீளமாக முடி வளர்த்து இருந்திருக்கிறார்கள், சந்தேகமடைந்த கிராமமக்கள் கணேசபுர கிராம அபிவிருத்தி சங்க தலைவரிடம் தெரிவிக்க அவர் போலீசார் உதவியுடன் அக்காட்டுப்பகுதிக்கு விரைந்தனர்.எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் அவர்களுடன் செல்ல வாய்ப்பு கிடைத்தது.


கச்சகோடி மலை(குன்று)
இது ஒரு குன்று இதன் தூரம் அகலம் சரியாக தெரியாது!!!ஆனால் திருகோணமலை மாவட்டதின் உயரமான பகுதி. இது மூதூர் கிழக்கு கட்டைபறிச்சான் கிராமத்தில் இருந்து அண்ணளவாக 3KM தூரத்தில் கணேச புரம் என்ற சிறு கிராமத்தில் காணப்படுகிறது.குன்றும் காடும் அதனை சுற்றி வயல்கள் மூதூர் கிராமங்களுக்குரிய அதே அழகு. அந்த குன்றில் இருந்து பார்த்தால் மூதூர் கிராமங்களை  google earth தில் பார்த்த அதே அனுபவம் கிடக்கும்.
சரி சொல்லவந்த விடயத்துக்கு வருகிறேன். நாங்கள் அங்கு சென்ற பொழுது யாரையும் காணவில்லை. ஆனால் பொலிசாரும் மக்களும் எதாவது நடந்திருக்கிறதா என மலையும் அதனை சுற்றி உள்ள பகுதியையும் தேட ஆரம்பித்தனர். திடிரென அங்கு எங்களுடன் வந்த போலீஸ்காரர் ஒருவர் எல்லோரையும் மலையின் நடுப்பகுதியில் உள்ள ஓர் இடத்திற்கு எல்லோரையும் அழைத்தார்.அங்கு சென்று பார்த்தல் 4 அடியில் ஒரு குழி, அது மேலும் ஆழமாக தொண்டபட்டு இருக்கவேண்டும் மீதியை மூடி விட்டார்கள் என்று நினைகிறேன்.அப்போது எல்லோரிடமும் பல கேள்விகள் எழுந்தது.ஏன் தோண்டப்பட்டிருக்கிறது ???புதையலாக இருக்குமோ???அப்படி புதையலாக இருந்தால் எப்படி இவ்வளவு இடம் இருக்க இந்த இடத்தில்தான் புதையல் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியும்??? அதற்கும் விடை அந்த இடத்தில் கிடைத்தது அந்த குழிக்கு அருகில் இரண்டு மலையில் புதைந்த கற்கள், இந்த இரண்டு கற்களுக்கு இடையில்தான் இந்த குழி இருந்தது. ஒரு கல்லில் சிறிய ஆமை உருவம் செதுக்கபட்டு இருந்தது.மற்றய கல்லில் சதுர அடையாளம் அது கைபேசியில் உள்ள கஷ்(#)அடையாளம் போல இருந்தது.
என்ன இருந்தது என்று தெரியவில்லை! ஏதாவது இருந்ததா என்றும் தெரியவில்லை! ஆனாலும் ஏதோ ஒன்று எடுக்கப்பட்டு இருக்கிறது,
 இது இரண்டாவது சம்பவம், ஏற்கனவே இம்மலையில் உச்சியில் 2008 காலப்பகுதியில் யாரோ சிலரால் ஒரு பாரிய குழி தொண்டப்பட்டு இருத்தது.இந்த குழியும் அந்த மலையில் உள்ள சில அடையாளம்களின் அடிப்படையில் தோண்டப்பட்டு இருந்தது.அந்த மலையின் உச்சியில் மனிதனால் உருக்கபட்ட நான்கு குழிகள் காணப்படுகின்றன.அந்த குழிகள் கிட்டதட்ட சிறிய உரல் போன்றது. இந்த சிறு குழிகளை  கிராமமக்கள் மூதாதையர் பாவித்த உரல் என்றுதான் நினைத்து வந்தனர். அந்த தோண்டப்பட்ட குழியில் பல செங்கற்களை காணக்கூடியதாக இருந்தது. அது மட்டும் அல்லாது அந்த மலையில் பண்டைய கட்டிட செங்கற்  சிதைவுகள் சில காணப்படுகின்றன.இம் செங்கற்கள் மழையாலும் கற்றாலும் அரிக்கப்பட்டு சிறிய அளவுகள்தான் காணப்படுகிறது. இந்த மலைபகுதியில்தான் எதாவது இருக்கும் என்று கிராமவாசிகளை தவிர்த்த நபர்களுக்கு எப்படி தெரியும்?
அவர்களுக்கான வழிகாட்டி எங்கிருந்து கிடைத்திருக்கலாம் ?
யாரால் புதைக்கப்பட்டு இருக்கலாம்


சவக்குழிகள் தோண்டப்பட்டு உடல் எச்சம்கள் எரிக்கப்படல்
கடந்த சில மாதங்களாக இனம்தெரியாத நபர்களால் கட்டைபறிச்சான் இந்துமாயனத்தில் புதைக்கபட்ட மூன்று உடல் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு எரிக்கபட்டு உள்ளது.நாங்கள் அங்கு சென்று பார்த்த பொழுது மூன்று சவக்குழிகள் தொண்டப்பட்டு இருத்தது தோண்டப்பட்ட குழியுள் தேங்காய் புதைக்கப்பட்டு காணப்பட்டது. சுற்றி எங்கிலும் மதுபான போத்தல்கள்,பிளாஸ்திக் சோடா போத்தல்கள் காணப்பட்டன.அது மட்டுமல்லாது ஒரு பெண் உருவபொம்மை செய்யபட்டு ஒரு பெண் அணியும் எல்லா ஆடைகளும் அணியப்பட்டு எரிக்கபட்டு காணப்பட்டது(பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது). இது புதையல் தொண்டுபவர்களின் வேலை என கிராம மக்களிடம் வதந்தி நிலவுகிறது.
எவ்வாறாகினும் இவ்வாறன செயல்கள் கண்டிக்கத்தக்கன, மயானம்கள் கோவிலை போல புனிதமான இடம்,அங்கு நம் உறவுகளின் உடல்கள் தோண்டி எரிக்கப்படுவது எவ்வளவு ஈனத்தனமான செயல்,ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு நம்பிக்கைகளோடு தங்கள் உறவுகளின் உடல்களை புதைத்து விட்டு வருகின்றனர், எமது உறவின் ஓருவரின் சவக்குழி தோண்டப்பட்டு எரிக்கபட்டால் எமக்கு எவ்வளவு கோவம் வரும்?
கேள்விகள் பல பதில் தெரியவில்லை!!!
இது நடந்து முடிந்து விட்டது இனி எதுவும் செய்ய முடியாது என்று சில நண்பர்கள் கருத்துரை அளித்துள்ளார்கள்.நாங்கள் புதையலை தேடவேண்டாம் நம் முப்பாட்டன்களின் வரலாற்றை தேடி ஆவணப்படுத்துவோம்!!!அப்படி இல்லாவிட்டால் அவைகள் கூட காணாமல் போய்விடும் நான் குறிப்பிட்ட மலை தவிர பல மலைகள் மூதூர் கிழக்கில் உள்ளது அது அந்த மலைகளும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் பல வரலாற்று எச்சம்கள் காணப்படுகிறது அவை தொடர்பான விடையங்களை தொடர்ந்து புகைப்பட ஆதாரங்களுடன் பதிவுகளை தொடருவேன்!!!
தொடரும் ...............

Wednesday, January 25, 2012

தமிழ் கட்சிகள் இணைவு????



இந்த வாரம் நான் கேட்ட இனிப்பான செய்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.இது ஒரு நல்ல தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். என் என்றால் என்னதான் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இப்பொழுது இருகட்சிகளும் ஒரு புள்ளியில் நிற்கின்றன.(சந்திரகாந்தன் அவர்கள் சம்பந்தர் அவர்களுக்கு எழுதிய கடிதம் மூலமாக புரிகிறது) காரணம் மாகாணங்களுக்கான காணி போலீஸ் அதிகாரங்கள் அடிப்படையாக கொண்டு அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தை !!! இது ஒரு ஆரோக்கியமான விடயம். ஆனாலும் இப்பொழுது ஒரு பிரச்சனை காணப்படுகிறது.என்னவென்றால்”தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்பது வடக்கு கிழக்கு இணைத்த மாகாணம் ,TMVP கேட்பது கிழக்கு மாகாணம்.இது ஒன்றுதான் இப்பொழுது சிக்கலை கொடுக்கிறது.
இப்பொழுது என்ன கேட்டு கூட்டமைப்பு அரசுடன் பேசுகிறதோ!!!அதைத்தான் EPDP கூட வலியுறுத்துகிறது.  இவ்வாறு இருக்கும்போதும் போலீஸ் காணி அதிகாரங்கள் பெற்ற வடக்கு கிழக்கு மாகாணம் என்பதுதான் எம்மக்களுக்கு பூரண மனித பௌதிக வளம் கொண்ட மாகாணமாக அமையும். என் என்றால் ஒரு மொழி பேசும் மக்களுக்கு இரண்டு போலீஸ் பிரிவுகள் சட்டம்கள் பொருத்தமற்றது. வடக்குகிழக்கு பண்டைய காலம் தொட்டு தமிழ் மக்களின் பிரதேசமாக இருக்கிறது..அதிகார பகிர்வு சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும்தான், வடக்கு கிழக்கு மக்களுக்கு இடையில் இல்லை.எது எப்படியாகினும் தமிழ் மக்களுக்குகான உரிமை போராட்டம் வடக்கு கிழக்கை அடிப்படையாக கொண்டுதான் தோற்றம் பெற்றது. அதனால் தீர்வுகளும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயக பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு அமையவேண்டும். இதைதான் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
இப்பொழுது கூட்டமைப்பு,ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியன வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரத்தை கோருகின்றன. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கிழக்கு மாகாணம் என்ற கொள்கையை விட்டு வடக்கு கிழக்கு இணைத்த மாகாணத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசிய விடயங்களை வெளிப்படையாகக் வெளியிடுவதில்லை இதை சந்திரகாந்தன்(பிள்ளையான்)கூட அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதை தவிர்த்து தமிழ் கட்சிகள் குறைந்தது கருத்து பரிமாறலையாவது மேற்கொள்ள வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது தமிழ் கட்சிகள் தனித்து செயல்படாமல் விட்டுக்கொடுப்புகளுடனும் அர்ப்பணிப்புக்களுடன் செயல்படுவது நன்று!!!
ஒன்றாய் இணைந்து விட்டால் கட்டாயம் ஒரு முடிவு கிடைக்கும்.
இனியும் நாம் வீரம்,துரோகம் என பேசிக்கொண்டு இருந்தோமானால் கிடைப்பது கூட கிடைக்காது(வீரம் ,துரோகம்என்ற சொற்கள் தமிழ் சினிமாக்காரர்களால் குத்தகைக்கு எடுக்க பட்டு விட்டது). ஏன் என்றால் சர்வேதேச சமுகம் இலங்கை மீது இனபிரச்சனை மீது கடும் இறுக்கத்துடன் செயல்ப்படுகிறது.தமிழர் தீர்வில் அக்கறை காட்டுகின்றன(இந்தியாவும் சீனாவும் அக்கறை கடுவது போல் நடித்து கொண்டு இருகின்றன) இந்த உந்துதளுடன் தமிழ் கட்சிகள் செயல் படவேண்டும் .பழம் கனிகிறது அழுக முதல் சாப்பிட வேண்டும்.   

Tuesday, January 24, 2012

அன்புள்ள கலாமுக்கு ,,,,,,


மதிப்புக்குரிய அப்துல்கலாம் அவர்களுக்கு இலங்கையில் அமைதிப்படையில் பணி புரிந்த இந்தியவீரன் எழுதிக்கொள்வது.ஐயா நீங்கள் இலங்கை சென்ற பொழுது இந்திய வீரர்கள் நினைவு இடத்தில் பெருமையுடன் அஞ்சலி செய்தீர்கள்

நீங்கள்  அஞ்சலி செய்ததை இட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் பிற நாட்டை எப்படி நீங்கள் பெருமைப்படும் அளவுக்கு பாதுகாத்தோம் என்பதை நீங்கள் கேட்டால் நீங்களும் எங்களை நினைத்து இன்னும் பெருமைப்படுவீர்கள். உங்களுக்காக ஒரு மணித்தியாலம் நடந்த சம்பவத்தை கூறுகிறேன்,கேட்டு பெருமைப்படுங்கள்.
1989 ஆண்டு ஒன்பதாம் மாதம் 13திகதி(புதன்கிழமை) அண்ணளவாக 8.30 இருக்கும் மூதூர், கட்டைபறிச்சான் பகுதியில் உள்ள சின்னமட்டக்களப்பு பகுதியில் எங்களுக்கும் புலிகளுக்கும் சண்டை மூளுகிறது. எங்கள் படை வீரன் ஒருவன் அச்சண்டையில் சாவடைந்தான். அந்த ஆத்திரத்தை தீர்க்க பழிக்குப் பழி வாங்க வேண்டிய தேவை இருந்தது.(எத்தனை சினிமா பார்த்திருப்போம்!! நண்பனை கொன்ற வில்லன் கூட்டத்தை பழி வாங்க வேண்டும்) நாங்கள் கட்டைபறிச்சான் கிராமத்தினுள் புகுந்தோம்.முதலில் எங்கள் கண்ணில்பட்டது.விபுலானந்த வித்தியாலயம் என்ற பாடசாலை. அன்று பள்ளிநாள் எங்களுக்கு வசதியாய் போய்விட்டது.எங்கள் இயந்திர துப்பாக்கிகள் சுழன்றன,எல்லோரும் 9ம் ஆண்டுக்கு உட்பட்ட மாணவர்கள்!!!!!!!!!!11பேர் பலி!!!! படுகாயங்கள்!!!!  பாடசாலையில் இரத்தஆறு ஓட வைத்தோம்.அத்துடன் நாங்கள் முடித்து கொள்ளவில்லை. கண்ணில் பட்ட வீடுகளை நோக்கி எங்கள் துப்பாக்கிகள் முழங்கின. சாவுகள் படுகாயங்கள்,இதில் எங்களுடைய திறமை என்ன என்றால் இறந்தது எல்லாம் சிறுவர்களும் வயோதிபர்களும்.
இப்போது புரிகிறதா? நாங்கள் எப்படி பிற நாட்டையும் அம்மக்களையும் எப்படி பாதுகாத்தோம் என்று!!!!!!!இந்த சம்பவம் ஒரு கிராமத்தில் ஒரு மணித்தியாலம் நாங்கள் நடத்திய சாதனை இது . அத்த ஒரு கிராமத்தில் நாங்கள் செய்த சாதனைகள் வீர தீர செயல்கள் ஏராளம் ஒரு கடிதம் போதாது. இன்னமும் எங்களால் கால் கை (வாழ்கையை) இழந்தவர்கள் சாட்சிகளாக இருப்பார்கள்!!!

உங்கள் பெருமைக்குரிய
இந்தியப்படைவீரன்

(1989.09.13 #####அன்று இந்திய படையால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவம் !!!! என்னதான் அதன் பிறகு 18 வருடங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டாலும் எம் கிராம மக்களுக்கு மறக்க முடியாத நாள். முதல் முதலாக 11 சிறுவர்களை பிணமாக பார்த்தநாள். என் சகோதரி சங்கீதாவை எங்கள் குடும்பம் இழந்தநாள்!!! அவர்கள் செய்த வீரசெயல்களின் சாட்சியாக கட்டைபறிச்சானில் உள்ள  “தில்லம்கேணி” என்ற அழிந்தகிராமம் இன்னும் சாட்சியாக இருக்கிறது)
***கடிதம் கற்பனை சம்பவம் உண்மை

Thursday, January 12, 2012

இலங்கை தமிழர் சிங்களவர்களின் “ப்ளாஷ்பேக்”


இலங்கையில் என்னதான் பிரச்சனை? இரண்டு இனங்களுக்கு இடையில் ஆதிகார பிரச்சனை  இதில் மதங்களும் சம்பந்தபட்டுகொள்ளும்.
இனம் என்றால் என்ன ?ஒரு மொழி காலச்சாரத்தை கொண்ட மக்கள்.இலங்கையில் பிரச்சனைக்குரிய இரண்டு இனங்கள் தமிழர் சிங்களவர். சரி வாங்க இவங்கட ப்ளாஷ்பேக்க கொஞ்சம் சுருக்கமாக பார்போம் ..  
.இலங்கையில் ஆதிகுடிகள் இயக்கர் நாகர்(திராவிடர் ) இதை சொல்லுவது மகாவம்சம். அதன் பிறகு வடஇந்தியாவில் இருந்து தனது 700 நண்பர்களுடன் விஜயன் வருகை, அதன் பிறகுதான்  இலங்கையில் இன்னுமொரு புதிய இனம் உருவாக அத்திவாரம் இடப்படுகிறது .அதாவது குவேனி என்ற  பெண்ணை திராவிட(தமிழ்குடி) பெண்னை விஜயன் திருமணம் செய்வதன்  மூலம் இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றன.ஆனாலும் விஜயன் மறுபடியும் மதுரை பகுதியை ஆண்ட பாண்டு என்ற மன்னனின் மகளை திருமணம் செய்கிறான் அது மட்டும் இல்லாமல் தனது 700 நண்பர்களுக்கும் மதுரை பெண்களை திருமணம் செய்து வைக்கிறான்.
குவேனி விஜயனால் துரத்தபட்டு தனது இரு பிள்ளைகளோடு (ஆண்,பெண்) வாழ்கிறாள். குவேனி திராவிடர்களால் கொல்லப்படுகிறாள்.அதன் பிறகு விஜயனுடைய பிள்ளைகள் தங்களை தங்களே திருமணம் செய்து கொண்டு மலையா (malaya)(விஜயனின் சந்ததி) என்ற இனம் உருவாகிறது.
அதன் பிறகு மதுரை இளவரசிக்கும் விஜயனுக்கும் பிறந்த குழந்தைகள் மூலம் புலிந்தா (Pulinda) என்ற இனம் உருவாகிறது. அது மட்டும் அல்ல விஜனால் தனது மாமா மூலம் (மதுரை ராஜா) கலை குடும்பத்தினர் பிராமணர்கள் இலங்கைக்கு வருகின்றனர்.
இவை அனைத்தும் நடந்தாலும் இயக்கரும் நாகரும்(தமிழ் குடிகள்) இலங்கையில் வடகிழக்கு பகுதியை தங்கள் ஆட்சி செய்கின்றனர்.


 ஆனால் இலங்கை பூராகவும் காலாச்சாரம் ஒன்றாக காணப்பட்டது 
(இந்து).இதற்க்கு காரணம் இந்திய ஆதிக்கம்.
கிட்டதட்ட கி.பி நான்காம் நுற்றாண்டு தொடக்க காலப்பகுதி  விஜயனின் சந்ததிகள்(ஆரிய திராவிட கலப்பு ) மற்றும் மதுரை வம்சத்தினர்கள்,பிராமணர்கள் என்பவர்கள் மூலம் ஒரு புதிய இனம் உருவாகிறது.

மலையா இனம்+புலித்தா இனம்+பிராமணர்கள்+மதுரை வம்சத்தினர்

= சிங்களவர் என்ற இனம் உருவாக அடிப்படையான இனம்
  
ஆரிய திராவிடம் கலந்த இனம்தான் சிங்களஇனம். ஆனாலும் இம்மக்கள் தமிழ்,பாளி மொழிகளைதான் பேசி இருக்க வேண்டும்.ஏன் என்றால் அந்த இன மக்களின் தாய்மார்கள் தமிழர்கள்! தந்தையர் ஆரியர்.
அதன் பிறகு பௌத்த மதம் இலங்கை தீவுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. பௌத்தம் இனம் (திராவிடர்,ஆரியர்)  பாராமல் பரவுகிறது.
இப்போதுதான் சிங்கள மொழிக்கு அடித்தளம் இடப்படுகிறது. இலங்கை தீவில் உள்ள பௌத்த மதத்தவர்களுக்கு பொதுவான மொழி ஒன்று தேவைபடுகிறது.ஏன் என்றால் தமிழ் பாளி சமஸ்கிதம் ஆகிய மொழிகளை கொண்டவர்கள் கானபடுவதால் மொழி பிரச்சனை ஏற்படுகிறது. அப்பொழுதான் சிங்களம் என்ற மொழி தமிழ் பாளி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கொண்டு உருவாக்கபடுகிறது.
*பழைய சிங்களம் -கி.பி 7 - 12ம்நூற்றாண்டு வரை காலப்பகுதியிலும்
புதிய சிங்களம் 12ம் நூற்றாண்டு முதல் தற்போது வரை வரையிலும் உருவாக்கப்பட்டன.
தற்போதைய சிங்களமொழி உருவாக காரணமாக அமைந்த மொழிகள்  தமிழ்,வங்காள மொழி, பாளி, சமஸ்கிருதம்,டச்,ஆங்கிலம்,அது மட்டும் அல்ல இந்திய மொழிகள் அனைத்தும் சிங்களத்தில் உள்ளன.
இப்பொழுது ஒரு தீவில் இரண்டு மொழிகள்......இரு இனம்.....
இரண்டு இனத்திற்கும் தென்இந்திய தொடர்புகள்.. திருமணங்கள், படையெடுப்புகள் ,ஆக்கிரமிப்பு,...என்பவை போர்த்துகீசியர் வருகை மட்டும் இடம் பெறுகிறது..பிறகு ஒல்லாந்தர், பிறகு ....பிரித்தானியர் எல்லோரையும் ஒன்றாக்கி “பிரிடிஷ் சிலோன் மக்கள்” ஆக்கினான்!
அதுக்கு பிறகு நமக்கு நாமே வைச்சிகிட்டம் ஆப்பு!
நாங்க ஒண்டா இருக்கிறம் சாமி எண்டு சொல்லி அவனிட்ட நாட்ட வாங்கி...... இண்டைக்கு வரைக்கும் மல்லுக்கட்ட வேண்டிஇருக்கு.....


(((நான் இந்த பதிவு  எழுத முன்பு மகாவம்சம் சுருக்கம் (334 பக்கம்) படித்தேன்.
அதன்பிறகுதான் இது எழுவதற்கான எண்ணம் வந்தது. இதில் கூறப்பட்டவை மகாவம்சத்தை அடிப்படையாக கொண்டு அமைந்தவை))))
பிழைகள் இருந்தால் கட்டாயம் பின்னூட்டல் இடவும்

வெள்ளை ஹீரோதான் வேணும்- சுகாசினி


தமிழ் திரைப்படங்களில் இனிமேல் இயக்குனர்கள் MGR  போன்ற  வெள்ளையான நடிகர்களைத்தான் தேர்ந்து எடுக்க வேண்டுமாம்! நடிகை சுகாசினி வேண்டுகோள் !!!!!!!

சுகாசினி நல்ல நடிகை, நல்ல நல்ல எழுத்தாளர் ! ஆனாலும் ஏன் அவர் கோமாளித்தனமான கருத்துகளை வெளியிடுகிறார் என்று புரிய வில்லை. சுகாசினி எந்த காலத்தில் இருக்கிறாரோ தெரியவில்லை. இப்போது வந்த தமிழ் படங்களை பார்த்தாரோ தெரியவில்லை! அங்காடித்தெரு,தென்மேற்கு பருவக்காற்று இன்னும் மசாலா இல்லாத படங்கள் சுகாசினி கூறியவாறு MGR போல நடிகர்கள் பொருந்துவார்களா?
அவர் இன்னும் ஒன்று குறிப்பிட்டார் அது ஆதரிக்க கூடியதுதான் நடிகைகளை மட்டும் ஏன் வெள்ளையாக எடுகிரிங்க?இது வாஸ்தவமான கேள்விதான் ! ஆனாலும் விடுத்த வேண்டுகோள்தான்  அவரும் அந்த கூட்டம் தான் என்று நிருபித்து விட்டது.(சில பேருக்கு முகத்தில அரை இஞ்சிக்கு மேக்கப் போடா வேணும்)
கோடி கொடியா பணத்த கொட்டி படம் எடுக்கிற அமேரிக்கா காரன் கூட நிறத்த பார்த்து படம் எடுகிறல்ல!
ஆனால் படங்களுக்கு 5பாட்டு 4பைட்டு அம்மா சென்டிமென்ட் கற்பழிப்புகாட்சி வெள்ளையான ஹீரோ போதுமா? . நல்ல படம் எடுக்கிறவங்களையும் இந்த அம்மா விடமாட்டாங்க போல.
மசாலா படங்கள் கூட கதை தேடிப்போக இந்த அம்மா கலர கையில எடுதிட்டா? ஒரு பிராந்திய படம் அந்த பிரதேசத்தின் தன்மைகளை கொண்டுதான் இருக்க வேண்டும் என்று உலக சினிமாவை பற்றி கதைக்கும் இந்த அம்மைக்கு தெரியாதா?

திரை விமர்சன நிகழ்ச்சியில், ‘தமிழ் ரசிகர்களுக்கு படம் பார்க்கத் தெரியவில்லை’ என்று  குறிப்பிட்டார் கிராமத்திலிருந்து வரும் இயக்குநர்களுக்கு சீன் எப்படி வைப்பதென்று தெரியவில்லை என்றார்.
பின்பு  மணிரத்தினம் படித்தவர்களுக்குத்தான் படம் எடுக்கிறார் என்றார்.
அம்மணி எடுத்த முதல் படம் இந்திரா கிராமத்தை களமாகக் கொண்டு வந்த கதை என்பது நினைவில்லை போலிருக்கிறது (தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை இதற்கு மேல் யாரும் கொச்சைப்படுத்த முடியாது )
கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான் இன்று பெரிய இயக்குனர்கள்!
தமிழ் சினிமா நல்ல  படைப்பாளிகள் கையில் போய் ரொம்ப நாளாகிறது. மேடையிலும் ஜெயா டிவியிலும்(முன்னொரு காலத்தில் ) சீன் போட்டு திரும்பவும் ஹீரோயின் ஆக போறவோ தெரியல்ல ....
லாரன்சின் (நடன இயக்குனர்) ராஜாதி ராஜ படம் வந்த பொழுது அவர் விமர்சனம் என்ற பெயரில் தனி மனித விமர்சனம் செய்தார். ஏன் சூப்பர் கிட் படங்கள கூட எவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்தார்..
இந்த அம்மணிக்கு படைப்புகளை விமர்சனம் செய்ய தெரியாது. படைப்பாளிகளை விமர்சனம் செய்யத்தான் தெரியும்...


கலர விட கதைதான் முக்கியம் எண்டு இந்த அம்மாக்கு தெரியாதா ? இந்த அம்மாக்கு வக்காலத்து வாக்க நினைப்பவர்கள் YOUTUBE போய் பாருங்க இந்த அம்மா விமர்சனம்(காசினி பேசும் படம்) எண்ட பெயரில போட்ட சீன !!!
கா.செந்தூரன்